சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் CEO ஆனார்.

சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை கூகுள் CEO ஆனார்.

googleஉலகின் நம்பர் ஒன் இணையதளம் மற்றும் தேடுதளமாக விளங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் CEO பதவிக்கு இந்தியர் அதுவும் தமிழர் குறிப்பாக சென்னையை சேர்ந்த ஒருவர் பதவியேற்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி ஒவ்வொரு தமிழரையும் பெருமைப்பட வைத்துள்ளது.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது சீரமைப்பு செய்யும் பணிகளை துவங்கியுள்ள நிலையில் முதல்கட்டமாக அதன் CEO பதவிக்கு துடிப்பான இளைஞர் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்தது. இந்நிலையில் சுந்தர் பிச்சை என்பவரை தலைமை செயல் அதிகாரியாக இன்று அறிவித்துள்ளது.

சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளியில் படித்த சுந்தர் பிச்சை கடந்த 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் நுழைந்தார். கூகுள் நிறுவனத்தில் நுழைந்தவுடன் இவர் செய்த முதல் வேலை கூகுள் க்ரோம் என்ற பிரெளசரை வடிவமைத்ததுதான். இவர் உருவாக்கிய இந்த க்ரோம் பிரெளசர்தான் தற்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான பிரவுஸராக முதல் இடத்தில் இருக்கிறது. உலகின் மூன்றில் ஒரு பங்கு ஸ்மார்ட்போன்களில் இடம்பிடித்திருக்கும் ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்-ஸை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் சென்றவரும் சுந்தர் பிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட் மற்றும் டுவிட்டர் நிறுவனங்கள் சுந்தர் பிச்சையை மிக அதிக சம்பளம் கொடுத்து கொத்திக் கொண்டு போக முயற்சிக்கும்  ஒவ்வொரு முறையும், 50 கோடி ரூபாய் போனஸ் கொடுத்து சுந்தரைத் தக்கவைத்தது தான் கூகுள் செய்த புத்திசாலித்தனமான வேலை.

1972-ல் சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை, ஐஐடி கரக்பூரில் தொழில்நுட்பவியல் படித்தவர். ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பும் வார்டன் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்ற இவர், 2004-ம் ஆண்டு கூகுளில் சேர்ந்தார். புதுமைகளை அறிமுகப்படுத்தும் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார் சுந்தர். கூகுள் குரோம், கூகுள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமை இவரையேச் சாரும். அடுத்ததாக, ஆப்ஸ் மேம்பாட்டு துறைக்குத் தலைமை தாங்கினார். ஜி-மெயில் ஆப்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ்களை உருவாக்கியதில் இவரது பணி அளப்பறியது.

கூகுள் இவரைத் தனது ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு ஒன் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை வழங்கியது. மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், கூகுள் இரண்டிலுமே தற்போது சிஇஓ பதவியை வகிப்பது இந்தியர்கள் தான். உலகமே தன் சந்தேகங்களை கூகுளில் தேட, கூகுள் தேடிய பொக்கிஷமாக இருக்கிறார் சுந்தர் பிச்சை.

 

Leave a Reply